Pages

Friday, May 17, 2013

எனக்குமொரு வார்த்தை!!



மீள முடியாக் கவிதைகளில் 
எழுத்துக்கும் எண்ணத்திற்கும் 
ஊஞ்சல் கட்டி வியாபித்திருக்கும் 
நினைவுகளினூடே ரசனையாய் 
நகர்வலம் வருகிறாய் 

மறுதலிப்பின் வாசங்களினூடே 
காத்திருப்பின் குமட்டலில் 
சிறிது பெரிதாய் அளவுகளின்றி 
பரிதாப சில்லறை ஏந்தும் 
பிச்சைக்காரனின் தட்டில் 
பார்வைகளால் கலைத்துத் தேடுகிறேன்  
எனக்கும் வார்த்தை கிட்டுமோவென..

சிலாகித்து சிலிர்ப்பூட்டி நகரும் 
உருக்குலைந்து உடைந்த மேகத்தின் சாரலென 
குளிராய் ஆமோதிக்கிறாய்
கனவுகள் புணர்ந்து பெற்றெடுக்கும்  
வார்த்தைகளின் வெப்பத்தை...

சத்துணவுச் சோற்றை   
பிசைந்துப் பழகும் 
பள்ளிச் சிறுவனின் 
ஆதங்கத்தில் கடைசியாய் 
கண்டுணர்கிறேன்
தனியே காதலிக்கும் அலட்சியத்தை...

-புபேஷ்.

Thursday, May 16, 2013

நீயாகிவிட்ட நீ !!



தாளமாய்  படைக்கப்பட்டிருக்கிறாய் நீ!!..
சுருதியின் கடைசி எதிரொலியாய் 
நீள்கின்றன.....
உறக்கமில்லா இரவுகளில் 
அருகாமைக் கனவுகள்....

உன் இதயத்தின் வெற்றிடத்தில் 
புலப்படாதொரு புள்ளியில் 
ஏதேனும் ஒரு கோணத்தில் 
ஒளிந்திருக்கலாம்....; 
நானென அடையாளம் காணமுடியா என் நிழல். 

பேச எத்தனிக்கும் எல்லாத் தருணங்களிலும் 
பேசிக்கொண்டிருந்துவிட்டு 
நீ பேசவே மாட்டாயா  என்கிறாய்
பேந்த விழிக்கின்றன 
ஊமையாய் மாறி விட்டிருந்த  
மௌனங்கள்.....

ஏதேட்சையாய் "நா" கடித்ததில் 
ஆத்திகம் புகுத்தினாய் 
குறை பிரசவமாய் 
வலியுடன் பிதுங்கிப் பிறக்கின்றது 
கனவுகளில் நாத்திகம் 

நான்-நானாய் இருந்த போது 
நீ-நானானாய்.. 
நான் - நீயாக மாற நினைத்த போது 
நீ- நீயாகி விட்டாயே??

உன்  கடைசி நாட்களின்
கை யொப்பங் களிலேனும் 
வெளிப்படலாம் 
தடுமாற்றமாய்...... 
என்னைப்பற்றியதான ஞாபகங்கள்!!

என் மரணத்தின் கடைசிச்சொட்டு  
கண்ணீரில் நிச்சயமாய்  நீட்சித்திருக்கலாம் 
உன் நினைவுகளை விட்டுப் பிரியும் 
பிரியத்தின் அடர்த்தி....;

-புபேஷ்.

Thursday, February 21, 2013

கண்களில்!!



(தருமபுரி குடிசை எரிப்பில் எரிந்த ஒரு காதல்)
 

முதல்முதலாய்
நம் பார்வைகள் எதேச்சையாய் பார்க்க நேரிட்டபோதே,
உன் விழிகளை எச்சரித்திருக்க வேண்டும் நான்...
மறுபடியும் பார்க்காதே என்று !!

கண்ணாடிக்கு பதிலாக
என் கண்களில் உன்னை பார்த்துக்கொள்ள
ஆரம்பித்துவிட்டாய்...

பிறிதொரு நாள்
பரவசமாய் உன் கண்களுக்குள் என்னையும்
குடிவைத்தாய்...

நான் ஆகாயமானேன்.,
நீ பார்வை ஆனாய்..
கண்களின் நீரானேன் நான்..
அதில்  நீந்துபவளானாய் நீ !!
மொழிகளுக்குள் வசப்படாத காதல்
உன் விழிகளுக்குள் அகப்பட்டுக்கிடந்தது.

ஒன்றிலிருந்துதான் மற்றொன்று தோன்றுமென்பது விதி.
எனக்கும் அப்படித்தான்..
உன் கண்களிலிருந்துதான் என் உலகமே!!

இமைகள் மூடாதிருக்கும்வரை
உன் கண்களிலிருந்து தவறி விழுந்து விடுவேனோ
என்ற அச்சம்தானுனக்கு எப்போதும்... 
ஒரே கண்களில் இரு கனவுகளாய்
கட்டிபிடித்துக் கிடந்தோம்..
ஒரே உடலில் இரு ஹோர்மோன்களாய்
உயிரை வலம் வந்தோம்...

கடைசியில் காதலை உன்னோடு சேர்த்துக்கட்டி
சாதித் தீ எரித்ததடி...ஒருயிராய் இருந்த உன்னை!
நம் ஞாபகங்களின் நினைவுத்தீ  எரித்து முடித்ததடி
மீதமிருந்த என்னை!!

வாழ்கையின் பாதையெல்லாம்
காண்பித்துக்கொடுத்த உன் விழிகளுக்கு
ஏனோ..பாதங்களை காண்பித்துக் கொடுக்க தோன்றவில்லையே!!

நீ என்னை "வைத்திருந்தாய்" என்றே
இச்சமூகம்  சொல்லும்...
அவர்களுக்கு நிச்சயம் தெரியாது....,
உன் கண்களில் தானென்பது!!

-புபேஷ்.