Pages

Friday, May 17, 2013

எனக்குமொரு வார்த்தை!!



மீள முடியாக் கவிதைகளில் 
எழுத்துக்கும் எண்ணத்திற்கும் 
ஊஞ்சல் கட்டி வியாபித்திருக்கும் 
நினைவுகளினூடே ரசனையாய் 
நகர்வலம் வருகிறாய் 

மறுதலிப்பின் வாசங்களினூடே 
காத்திருப்பின் குமட்டலில் 
சிறிது பெரிதாய் அளவுகளின்றி 
பரிதாப சில்லறை ஏந்தும் 
பிச்சைக்காரனின் தட்டில் 
பார்வைகளால் கலைத்துத் தேடுகிறேன்  
எனக்கும் வார்த்தை கிட்டுமோவென..

சிலாகித்து சிலிர்ப்பூட்டி நகரும் 
உருக்குலைந்து உடைந்த மேகத்தின் சாரலென 
குளிராய் ஆமோதிக்கிறாய்
கனவுகள் புணர்ந்து பெற்றெடுக்கும்  
வார்த்தைகளின் வெப்பத்தை...

சத்துணவுச் சோற்றை   
பிசைந்துப் பழகும் 
பள்ளிச் சிறுவனின் 
ஆதங்கத்தில் கடைசியாய் 
கண்டுணர்கிறேன்
தனியே காதலிக்கும் அலட்சியத்தை...

-புபேஷ்.

Thursday, May 16, 2013

நீயாகிவிட்ட நீ !!



தாளமாய்  படைக்கப்பட்டிருக்கிறாய் நீ!!..
சுருதியின் கடைசி எதிரொலியாய் 
நீள்கின்றன.....
உறக்கமில்லா இரவுகளில் 
அருகாமைக் கனவுகள்....

உன் இதயத்தின் வெற்றிடத்தில் 
புலப்படாதொரு புள்ளியில் 
ஏதேனும் ஒரு கோணத்தில் 
ஒளிந்திருக்கலாம்....; 
நானென அடையாளம் காணமுடியா என் நிழல். 

பேச எத்தனிக்கும் எல்லாத் தருணங்களிலும் 
பேசிக்கொண்டிருந்துவிட்டு 
நீ பேசவே மாட்டாயா  என்கிறாய்
பேந்த விழிக்கின்றன 
ஊமையாய் மாறி விட்டிருந்த  
மௌனங்கள்.....

ஏதேட்சையாய் "நா" கடித்ததில் 
ஆத்திகம் புகுத்தினாய் 
குறை பிரசவமாய் 
வலியுடன் பிதுங்கிப் பிறக்கின்றது 
கனவுகளில் நாத்திகம் 

நான்-நானாய் இருந்த போது 
நீ-நானானாய்.. 
நான் - நீயாக மாற நினைத்த போது 
நீ- நீயாகி விட்டாயே??

உன்  கடைசி நாட்களின்
கை யொப்பங் களிலேனும் 
வெளிப்படலாம் 
தடுமாற்றமாய்...... 
என்னைப்பற்றியதான ஞாபகங்கள்!!

என் மரணத்தின் கடைசிச்சொட்டு  
கண்ணீரில் நிச்சயமாய்  நீட்சித்திருக்கலாம் 
உன் நினைவுகளை விட்டுப் பிரியும் 
பிரியத்தின் அடர்த்தி....;

-புபேஷ்.

Thursday, February 21, 2013

கண்களில்!!



(தருமபுரி குடிசை எரிப்பில் எரிந்த ஒரு காதல்)
 

முதல்முதலாய்
நம் பார்வைகள் எதேச்சையாய் பார்க்க நேரிட்டபோதே,
உன் விழிகளை எச்சரித்திருக்க வேண்டும் நான்...
மறுபடியும் பார்க்காதே என்று !!

கண்ணாடிக்கு பதிலாக
என் கண்களில் உன்னை பார்த்துக்கொள்ள
ஆரம்பித்துவிட்டாய்...

பிறிதொரு நாள்
பரவசமாய் உன் கண்களுக்குள் என்னையும்
குடிவைத்தாய்...

நான் ஆகாயமானேன்.,
நீ பார்வை ஆனாய்..
கண்களின் நீரானேன் நான்..
அதில்  நீந்துபவளானாய் நீ !!
மொழிகளுக்குள் வசப்படாத காதல்
உன் விழிகளுக்குள் அகப்பட்டுக்கிடந்தது.

ஒன்றிலிருந்துதான் மற்றொன்று தோன்றுமென்பது விதி.
எனக்கும் அப்படித்தான்..
உன் கண்களிலிருந்துதான் என் உலகமே!!

இமைகள் மூடாதிருக்கும்வரை
உன் கண்களிலிருந்து தவறி விழுந்து விடுவேனோ
என்ற அச்சம்தானுனக்கு எப்போதும்... 
ஒரே கண்களில் இரு கனவுகளாய்
கட்டிபிடித்துக் கிடந்தோம்..
ஒரே உடலில் இரு ஹோர்மோன்களாய்
உயிரை வலம் வந்தோம்...

கடைசியில் காதலை உன்னோடு சேர்த்துக்கட்டி
சாதித் தீ எரித்ததடி...ஒருயிராய் இருந்த உன்னை!
நம் ஞாபகங்களின் நினைவுத்தீ  எரித்து முடித்ததடி
மீதமிருந்த என்னை!!

வாழ்கையின் பாதையெல்லாம்
காண்பித்துக்கொடுத்த உன் விழிகளுக்கு
ஏனோ..பாதங்களை காண்பித்துக் கொடுக்க தோன்றவில்லையே!!

நீ என்னை "வைத்திருந்தாய்" என்றே
இச்சமூகம்  சொல்லும்...
அவர்களுக்கு நிச்சயம் தெரியாது....,
உன் கண்களில் தானென்பது!!

-புபேஷ்.

Tuesday, July 10, 2012

காட்சியும் காதலும்..!!

மருதாணியிட்டாய்...
நான் கேட்கவில்லை
கூடுதல் சிவப்பிற்கேனடி
என் இதயத்தை அறுத்தாய்...
உன்னை கேட்க முடியவில்லை .......

பட்டணத்திலிருந்து
ஊரு திரும்ப மணிக்கணக்காய்
கடந்து சென்ற பேருந்திற்காய் காத்திருக்கும்
படிக்கதெரியாத கிழவனைப்போல்
காத்திருக்கின்றது உன்னைப்பற்றியதான என் காதல்

குடையை திருப்பிப்போட்டு
நனைய வைத்து கைதட்டிச் செல்லும்
பலத்த காற்றாய் நீ கடக்கும் வினாடிகள்
உன் ஆசையில் நனைய வைத்து கைதட்டிச் செல்கின்றன

ஞாபகங்களின் மூலை முடுக்கெல்லாம்
அலைந்து திரிந்து கடைசியில்
நினைவுத் திரியில் மோதி
முட்டி இறந்தது
அதே ஆசை
பிறிதொருநாள்....

கனவுகளை ஓட்டைப்போட்டு
தாறுமாறாய் எழுதிச் சொருகினாய்
நம்மைப்பற்றியதான கவிதைகளை ...
விடிந்ததும்  எதுவும் புலப்படுவதில்லை
நீ வெள்ளை மையால் எழுதியவை.....!!

நான் ஒளிவது மாதிரி ஒளிந்துக் கொள்கிறேன்
நீ தேடுவது மாதிரி நடி என்று விளையாடிக்கொள்கின்றன
உன் இமைகளும் கருவிழியும்....
நான் சாவது மாதிரி செத்துக்கொள்கிறேன்
நீ வாழ்வது மாதிரி வாழ்ந்து விட்டு வா என்று
முனகிக்கொள்கின்றன....
என் கடைசி நொடிக் காட்சியும்
காதலும்....

Sunday, October 9, 2011

சில.....

உன்னை நோக்கிய
நெடுந்தூர ஓட்டத்தில்
காதறுந்த வலதுக்கால் செருப்பு
உன் கடைசி நொடிக்காத்திருப்பின்
பெருமூச்சுடன் விசும்பி அழுகின்றது...

கவிதை ஒன்றை எழுதி நீட்டினேன்
காதல் எனப் பெயரிட்டாய் அதற்க்கு....
என் காதலை மொத்தமாய் எழுதி நீட்டுகிறேன்....
கூச்சமே இல்லாமல் கவிதை எனப்பெயரிடுகிறாயே???.

என் ஆசைகள் அனைத்தையும் சேர்த்து
சிறையில் அடைத்து வாழ்நாள் முழுக்க
உன்னை மட்டுமே பார்த்துச் சாகச்சொன்ன
நீதிபதி
உன் கண்கள் தான்....

காற்றின் சலசலப்பில்
நெடுநாட்களாய்
பறவையாய் பறக்க நினைத்து
மரத்தை திட்டித்தீர்த்த இலை ஒன்று.,
கடைசியில்
விடுபட்டு, பறந்து, உதிர்ந்து
சருகாய்க்கிடந்தவுடன்
காற்றைச்சபிக்கின்றது
என் நினைவுகளைப்போல்....

இணைபிரிந்த தரிசுநிலத்தின்
வெடிப்புற்றுக்கிடக்கும்
இரு உதடுகளுக்கு நடுவே
கூச்சமே இல்லாமல்
முத்தமிட்டுச்செல்கின்றது மழை....
காத்துக்கிடந்த நம் காதலுக்கு நடுவே
நீ கல்யாண அழைப்பிதழை
நீட்டியதுப்போல்..

உன் பார்வைகளின்
மகுடிக்கு தலையசைக்கும்
காதுகேளாத என் இதயத்திற்கு
கல்யாண ராகமும் ஒன்று தான்
முகாரி ராகமும் ஒன்று தான்....

மேகம் வானத்தின் அழுக்கென்றால்
என் ஞாபகங்களை என்னவென்பாய்?

கொன்றால் பாவம்
தின்றால் தீருமாமே...!!
காதலை அறுத்துக்கொன்றுவிட்டு
காதலையே திங்கப்போகின்றாயா??

Monday, September 12, 2011

மாற்றம்..



எப்போதும் போலவே
என்னை நீயாய் காட்டுகின்றது
இந்நிலைக்கண்ணாடி...
தன்னை வேறோன்றதாய் காட்டிக்கொள்வதில்
யாருக்குத்தான் அங்கலாய்ப்பில்லை..?

குறிசொல்லும் ஜோசியக்காரனின்
எந்த வார்த்தையும் செவிக்குள் ஏறவில்லை...
உன்னைக்குறித்து பேச்செடுக்கும்வரை...

நீ கிள்ளி வைத்துச்சென்ற
பேருந்து நிறுத்த மரத்தில்
மணிக்கணக்காய்
உன் நகத்தின் வாசம் முகர்கிறேன்...

உன் அழகால்
நான் மயங்கவில்லை
உன்மேலுள்ள என் மயக்கத்தால்
நீ கூடுதல் அழகாகிறாய்...

பல்லாங்குழிக்கற்க்களாய்
அடுக்கி வைக்கப்பட்ட என்
ஆசைகளின் முதலாவதாய்
மேலே நிற்கும் ஒன்று
தடுமாறி விழுந்து கடைசியாய் மாறிப்போனது
நீ எதுவும் பேசாமல் கடந்துச்சென்ற அவ்வினாடி...

Sunday, July 24, 2011

மௌனம்...


விபூதி பூசி மரக்கச் செய்து விட்டு
சாமிக்கு அலகு குத்திக்கொள்வதை போல
உன் மௌனம் குழைத்துப்பூசி மரக்கச்செய்து
உன்னைப்பற்றியதான கனவுகளை
குத்தி விட்டுச் செல்கின்றது காதல்....

தாவணியின் ஓரங்களில்
நீ முடிந்து வந்துக் கொடுத்த
கல்யாண வீட்டு மைசூர் பாக்கு
பல்லிடுக்கில் சிக்கிக்கொண்டு
நெடுநேரமாய் உன் பிரியத்தை
"வலி" யுறுத்திக் கரைந்தது....

சலனமின்றி
என் நிழலின் காதருகே குனிந்து
ரகசியமாய் எதோ சொல்லிப்போகும் உன் மௌனம்
ரம்மியமான ஓராயிரம்
இசைத்தட்டுகளை என் இதயத்தின்
செவிட்டு அறைகளில் மீட்டிச்செல்கின்றது...

நிழலுக்கும் பிம்பங்களுக்கும்
வித்தியாசம் புரிபடாது போன
அத்தருணத்தில்
பிம்பங்களுக்குள் வெளிப்படுவதாய் நினைத்த
உன் தயக்கம் குழம்பிப்போய்
என் நிழலுக்குள் வெளிப்பட்டு நீள்கின்றது

முற்ப்பிறவியில்,
இதைவிடவும் அதிகமாய்
உன்னைக்காதலித்திருக்கக்கூடும்...நான்
உன்மேல் இன்னும் பைத்தியம்
போதாதென்று இழுத்தடிக்கின்றதோ
காதல்...?

நான் சந்தர்ப்பவாதிதான்...
நீ அருகிலில்லாத சமயங்களில்
உன் நினைவுகளை மட்டும் காதலிக்கிறேனே..!!

தயவுசெய்து சொல்லிச்செல்
என்ன விலைக்கு விற்றாய்
என்னால் வாங்கமுடியாத
அந்த இதயத்தை ????