Pages

Thursday, April 21, 2011

நீ!!!!



நேர்த்தியான உன்
உதட்டுச்சிரிப்பில்
நேர்கோட்டில் நிறுத்திவிட்டாய்
இருளையும், பகலையும்..
பொழுதுகள் அறியாது
திக்கித்திணறுகின்றன
என் காத்திருப்புகள்......

என் வானத்தை கையோடு
எடுத்துச்சென்றுவிட்டாய்
குப்பைமேடாய் குவிந்து கிடக்கின்றன
சிறகுகள்....

சன்னலடைத்த அறைக்குள்
உலர்த்தப்பட்ட கைத்துண்டாய்
உன் நினைவுக்குறிப்புகள்....

உன்னைப் பொறுத்தவரையில்
இது காதல்......
என்னைப்பொறுத்தவரை
உன்னை அடைய என் தவம்...

புலப்படாத லாவகங்களில்
புரிபடாததாய் நகர்கின்றது
உன்னை சுமந்தபடி வாழ்க்கை.

Sunday, April 3, 2011

கனவுகள்..!


உடைந்த மேகத்தின்
கடைசிச்சொட்டுருகி
உனக்காகவே காத்திருக்கின்றது
நீ கடந்து செல்லும் மரத்தின் இலை நுனி மேல்..


குதூகலங்களின்
கும்மியிருட்டு ஒளிதல் போட்டியில்
கலந்து கொள்கிறோம்
நானும் என் கனவுகளும்...

பல்வேறு முகங்களாய் ஒளிந்திருக்கிறாய்
என்னுள் ...
கண்டுபிடிப்பதற்குள்
கலைந்து விடுகின்றன என் கனவுகள் ...

உன் பார்வைகளுக்கு முன்னே
கடினமாகிவிடுகின்றது
என் உயிரின் ஒளிதல் ..

கொதித்து அடங்கியும்
அழியாது ,மழையாய் திரும்பி வரும்
ஆவியாய்ப்போன தண்ணீர் ....
உன் நினைவுகளைப்போலவே .....

நிராயுத பாணியாய்
நிர்வாணமாய்
நிற்கின்றது என் அகங்காரம்...

என் மரணத்திலேனும்
உனக்கு புரிபடலாம்
சேர்த்துக்கட்ட மடக்க வியலா
கால் பெரு விரல்களில்
உன் காதலின் நீட்சி.....